தமிழ் இலக்கணம் - Tamil Grammar: Introduction Page
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நல்வரவு!
வணக்கம் வருக!
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு!" - குறள்: 392 என்கிறது தமிழர் திருமறையான திருக்குறள்.
ஆனால், தற்கால தமிழரில் பெரும்பான்மையினரோ தமிழ் இலக்கணம் கற்பதில் ஆர்வம் காட்டாதோராய் உள்ளனர். அதற்குத் தமிழ் இலக்கணம் கற்பது அல்லது கற்பிப்பது கடினமாக தென்படுவதும் ஒரு காரணம் எனலாம்.
உண்மையில் தமிழ் இலக்கணம் கடினமான ஒன்றல்ல; ஆர்வத்துடன் கற்க முனைந்துவிட்டால், அது பேரின்பம் தரவல்லது.
ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கிலத்தில் எழுதும் பொழுது ஒரு எழுத்துப் பிழையேற்பட்டாலும் அதற்காக கவலை படுகிறோம். ஆனால் தமிழில் ஏற்படும் பிழைகளை நாம் ஒரு பொருட்டாகவே கருதாதோராய் உள்ளோம். எம் மொழிதானே எனக் கணக்கில் எடுக்காது விடுவோராகவும் உள்ளோம். இந்நிலை மாறவேண்டும்.
இதனைக் களைந்து, எல்லோரும் எளிதாக தமிழ் இலக்கணம் கற்க முகநூலில் உருவாக்கப்பட்டுள்ள பக்கமே "இலக்கணம்" என்னும் பக்கமாகும். காலையில் எழுந்ததும் தேநீர் அருந்திய வண்ணம் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப்போய், முகநூலில் என்ன புதுமையான செய்திகள் வந்துள்ளன எனப் பார்க்கும் காலமாகிப்போய்விட்டது; அதுவும் வளர்ச்சிதான். காலத்துக்கு ஏற்ப, தொழிற்நுட்பத்துக்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்ளத்தான் வேண்டும். எம் தமிழும் எல்லா நுட்பத்திலும் மிளிரத்தான் வேண்டும்.
எனவே காலையில் எழுந்ததும் முகநூலில் தமிழ் இலக்கணத்தையும் கற்க முடியுமாக இருந்தால், ஆர்வமுள்ள சிலரேனும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
அதற்கானதோர் முயற்சிதான் இந்த "முகநூல் இலக்கணம்" பக்கம்.
விரும்புவோர் இணைந்துகொள்ளுங்கள். வாருங்கள் ஒன்றாய் இணைந்து தமிழ் இலக்கணம் என்னும் தேரை இழுப்போம்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு

Comments
Post a Comment